Thursday, March 8, 2012

காதல் கவிதைகள்...

காதல் தோல்வியா அழு...
வாய் விட்டு அழு, கதறிக் கதறி அழு...
உன் கண்ணீரோடு காதலும்
கரைந்து போகும்வரை அழு...

பின்பு உலகத்தைப் பார்...

காதலையும் மீறி
எத்தனையோ அழகுகள்..
காதல் தோல்வியும் தாண்டி
எத்தனையோ பிரச்சனைகள்..

அழகுகளை ரசிக்கக் கற்றுக்கொள்...
பிரச்சினைகளை தீர்க்க பழகிக்கொள்..
வாழ்வதற்கே வாழ்க்கையென்பதை புரிந்துகொள்...!

பெற்றவள் இறந்தாலே
கண்ணீர்தான் சிந்துகிறாய்...
காதல் இறந்ததற்கா
உயிரைச் சிந்தத் துணிகிறாய்..

காதல் புனிதமானதுதான்...
புனிதமானதெதுவும்
உயிரை விலையாய் கேட்பதில்லை.

விலங்குகளை பலி கொடுத்து
கடவுளின் புனிதத்தை கெடுக்கிறோம்..
நம்மையே பலிகொடுத்து
காதலின் புனிதத்தை கெடுக்கிறோம்..

நண்பா..
காதல் தோல்வியா..?

காதலியை வெறுத்திருந்தால்
தேடிச் சென்ற காதலை மறந்து
தேடிவரும் காதலை அணைத்துக்கொள்..

காதலையே வெறுத்திருந்தால்
களவைப் போல் காதலையும்
கற்று மறந்தாய் நினைத்துக்கொள்..

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
என்பதைப் புரிந்துகொள்...

No comments:

Post a Comment